குழந்தை இறந்த சம்பவம் தொடர்பாக அஜாக்கிரதை தாய்க்கு 43 ஆண்டுகள் சிறை
நியூயார்க்: அமெரிக்காவில் பாத்டப்பில் 13 மாத குழந்தை இறந்த சம்பவம் தொடர்பாக அஜாக்கிரதை தாய்க்கு 43 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என தெரிகிறது.
அமெரிக்காவில் கொலராடா மாநிலத்தில் உள்ள போர்ட் லூப்டன் பகுதியை சேர்ந்தவர் ஷன்னான் ஜான்சன் (34). இவர் கடந்த செப்டம்பர் மாதம் தனது 13 மாத குழந்தையை தனி அறையில், பாத்டப்பில் விளையாட விட்டு, மற்றொரு அறையில் பேஸ்புக் இணையதள விளையாட்டில் மூழ்கினார். குழந்தையை மறந்தார். குழந்தை பாத்டப் தண்ணீரில் மூழ்கி மூச்சு திணறி இறந்தது.
இது தொடர்பாக போலீசில் ஷன்னான் தனது தவறை ஒப்புக் கொண்டார். இவரை போலீசார் கைது செய்து உள்ளூர் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். ‘தாயின் அஜாக்கிரதையால் தண்ணீரில் மூழ்கி மூச்சு திணறி குழந்தை இறந்துள்ளது. இந்த குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு 43 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படலாம்’ என தெரிகிறது. மீண்டும் வழக்கு விசாரணைக்கு வரும் போது தண்டனை விவரம் அறிவிக்கப்படும்